ஜப்பான் செல்ல முயன்ற இரு தமிழர்கள் கைது
கடவுச் சீட்டில் மோசடி செய்து ஜப்பான் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரு தமிழ் இளைஞர்களையும் பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மகிந்த பிரபாத் ரணசிங்க அனுமதி அளித்தார். பரராஜசிங்கம் தயாளன், சிவகுமாரன் செல்லத்தம்பி ஆகிய இருவருமே குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களாவர். கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி இவர்கள் இருவரும் விமானம் மூலம் ஜப்பான் செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இவர்களின் கடவுச்சீட்டுகளைப் பரிசீலித்த போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்கள் மீண்டும் வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது இருவரையும் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையிலும் செல்வதற்கு நீதிவான் அனுமதித்தார்.