வெளிநாடு சென்று படிக்க பெற்றோர் அனுமதிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை…!!
கோவை மசக்காளிபாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் அப்பகுதியில் உள்ள மில் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார்.
இவரது மனைவி சந்திர கலா(வயது 44). இவர்களது மகள் ஹரிபிரியா(21) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.
சமீபத்தில் கல்லூரியில் நடந்த வளாக தேர்வில் ஹரி பிரியாவுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் ஹரிபிரியாவுக்கு வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அவர் வெளிநாட்டில் மேல்படிப்பு(எம்.டெக்.) படிக்க விருப்பப்பட்டார்.
இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை. நேற்று மாலை ராஜேந்திரன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது ஹரிபிரியா நான் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என தந்தையிடம் கூறினார்.
அப்போது ராஜேந்திரன் ‘ஒரே மகளான உன்னை வெளிநாடு அனுப்ப மாட்டோம், நீ உள்ளூரிலேயே வேலைக்கு சென்றால் போதும்’ என கூறி உள்ளார். இதனால் ஹரி பிரியா மனமுடைந்தார். பின்னர் ராஜேந்திரன் உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டார்.
தன்னால் விருப்பப்பட்ட படிப்பை படிக்க முடியவில்லையே என மனமுடைந்த ஹரி பிரியா இரவு 7 மணி அளவில் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது தாயார் சந்திரகலா அதிர்ச்சியடைந்து அவரும் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய ராஜேந்திரன் தனது மனைவியும், மகளும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் சந்திரகலா, ஹரிபிரியா ஆகியோரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ஹரிபிரியா இறந்தார். சந்திரகலாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலின் பேரில் சிங்கா நல்லூர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஹரிபிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating