பத்து உயிர்களை பறித்த இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த 3 பேர் கைது..!!
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் சதுக்கத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பத்துபேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது, இந்நிலையில், சுல்தானாமெட் சதுக்கம் தாக்குதல் தொடர்பாக மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள அன்ட்டால்யா நகரில் பதுங்கியிருந்த ரஷியாவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அன்ட்டால்யா நகரில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் பிடிபட்ட மூவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் வைத்திருந்த தொடர்புகளை நிரூபிக்கும் வகையிலான முக்கிய ஆவணங்களும், சில சி.டி.க்களும் கைப்பற்றப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுல்தானாமெட் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக தங்கள் நாட்டை சேர்ந்த மூன்றுபேரை துருக்கி போலீசார் கைது செய்துள்ளதை ரஷிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
Average Rating