உலகிலேயே செல்பி சாவுகள் இந்தியாவில்தான் அதிகம்: ஆய்வு…!!
அறிமுகமான புதிதில் ஷாப்பிங் மால், பூங்கா, சுற்றுலாத்தளம் என்று பல்வேறு இடங்களில் வளைத்து வளைத்து செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர்கள், அதிக லைக்குக்கு ஆசைப்பட்டு ரெயில் கூரை, உயரமான மலை, என்று ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கத் ஆரம்பித்ததிலிருந்தே செல்பி சாவு தொடங்கி விட்ட நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக, செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் சென்ற ஆண்டு மட்டும் 27 பேர் செல்பி எடுத்துக் கொள்ளும் போது உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
மதுராவிற்கு அருகில் உள்ள கொசிகலாவில் 3 கல்லூரி மாணவர்கள் ஓடும் ரெயிலின் முன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல், 7 இளைஞர்கள் தனது நண்பனின் பிறந்தநாளை படகில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது செல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதவிர, தமிழகத்தின் நாமக்கல்லில் ஒரு இளைஞர் உயர்ந்த பாறையின் மீது செல்பி எடுக்க முயற்சித்த போது கால் தவறி கீழே விழுந்து பலியானார். நர்மதா கால்வாயில் குதிக்கும் போது செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் ராஜ்கோட்டில் உயிரிழந்தனர். இதேபோல் இந்த ஆண்டும் பல உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த மாதம் கூட மும்பையில் இருவர் செல்பியால் உயிரிழந்துள்ளனர். இதனால், செல்பி மோகத்தை கட்டுக்குள் கொண்டுவர மும்பை போலீஸ் 16 இடங்களை கண்டறிந்து அங்கு செல்பி எடுப்பதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating