சேலம் சிறையில் தீவிர சோதனை : கைதியிடம் மொபைல்போன் பறிமுதல்
சேலம் சிறையில் நடத்திய தீவிர சோதனையில் விசாரணை கைதியிடம் இருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் பொருட்களை பதுக்கி, சிறைக்குள் பயன்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. பீடி, சிகரெட், கஞ்சா போன்றவை தாராளமாக கிடைக்கின்றன.சிறையில் அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர். பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி சிறையில் திடீர் சோதனை நடத்தினர். கோவை விசாரணை கைதியிடம் இருந்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த தண்டனை கைதி ஒருவர், மொபைல் போனை சிறைக்குள் தாராளமாக பயன்படுத்தி வந்ததும், அதிகாரிகள் சோதனையிடுவது தெரிந்தால், விசாரணை கைதிகளிடம் கொடுத்து வைத்ததும் தெரியவந்தது. சிறை ஊழியர்கள் ஒத்துழைப்பின்றி, மொபைல் போனை எடுத்து வரவும் முடியாது. இதுபோன்ற சட்ட விரோத செயலுக்கு துணை போகும் ஊழியர்கள் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.