நடிப்புக்கு ஸ்ரீதேவி கும்பிடு
ஸ்ரீதேவி-போனி கபூர் இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதேசமயம் அரசியல் பக்கமும் கண்டிப்பாக தலை காட்ட மாட்டேன் என்று முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி கூறியுள்ளார். சின்னப் பெண்ணாக நடிக்க ஆரம்பித்து தென்னகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, பாலிவுட்டுக்குப் போய் அங்கும் சூப்பர் மெகா ஸ்டார்களுடன் இணைந்து நடித்து இந்தியாவின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிறகு போனி கபூரை திருமணம் செய்து செட்டிலானவர் இப்போது குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம், சைடில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இடையில் டிவி பக்கமும் தலை காட்டினார். அவரை மறுபடியும் படங்களில் நடிக்க வைக்க ஒரு குரூப் முயன்று கொண்டுள்ளது. கமல்ஹாசன் கூட அவரது அடுத்த படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு சமீபத்தில் எழுந்தது. இந்த நிலையில் நெல்லையில் ஒரு நகைக் கடையைத் திறந்து வைப்பதற்காக ஸ்ரீதேவி வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் பெரும் கூட்டம் கூடி விட்டது. இத்தனை காலத்திற்குப் பிறகும் தன்னைப் பார்க்க பெரும் கூட்டம் திரண்டது ஸ்ரீதேவிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. பின்னர் தன்னைச் சூழ்ந்த செய்தியாளர்களிடம் ஸ்ரீதேவி பேசுகையில், மறுபடியும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. என் மீது அன்பு கொண்டவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. குடும்ப வாழ்க்கையிலும், தயாரிப்புப் பணியிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். மறுபடியும் நடிக்க மாட்டேன். அதேபோல அரசியல் பக்கமும் கண்டிப்பாக வர மாட்டேன் என்றார் ஸ்ரீதேவி.