குரோம்பேட்டையில் தொலைக்காட்சி பெட்டி விழுந்து 2½ வயது குழந்தை பலி..!!
சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் சத்யவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர் ஜெகன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகள்கள் ஜெசிதா (வயது 2½), ஐஸ்வர்யா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகன் வீட்டில் வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வைத்து இருந்தனர். ஜெகனும், அவரது மனைவி லட்சுமியும் வெள்ளை அடிக்கும் பணியில் கவனம் செலுத்தினர்.
அப்போது குழந்தை ஜெசிதா, வீட்டின் உள்ளே மேஜை மீது வைத்து இருந்த தொலைக்காட்சி பெட்டியை ஆட்டியபடி விளையாடிக்கொண்டு இருந்தது. திடீரென தொலைக்காட்சி பெட்டி கவிழ்ந்து ஜெசிதா மீது விழுந்தது.
இதில் குழந்தையின் மார்பு, தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன் மற்றும் லட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தங்கள் மகளை மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தை ஜெசிதா, சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating