கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள்!! “நம்புபவருக்கு நல்லதே நடக்கும்”
வாழ்வில் எதை வேண்டுமானாலும் ஒருவர் இழக்கலாம். ஒருபோதும் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. ரோமை ஆதிக்க ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தன்னுடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் தக்கவைக்க முயன்ற அன்றைய யூத சமய நிறுவனத்துக்கு எதிராக குரல் கொடுத்த இயேசு, தன்னை நாடிவந்த ஏழை எளிய மக்களிடம் “நம்புங்கள், இறை ஆட்சி உங்களுடையதே’ என்ற வார்த்தையைத்தான் முதலில் போதித்தார். கானாவூரில் ஒரு திருமண விருந்து. இயேசு தனது தாய் மரியாளுடன் திருமணத்திற்கு சென்றிருந்தார். விருந்து நடந்து கொண்டிருந்த போது திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. மணமகளின் தந்தை வேதனையில் வெம்பிக்கொண்டிருந்தார். சூழ்நிலையை கவனித்த மரியாள், தனது மகனை அழைத்து திராட்சை ரசம் தீர்ந்து விட்டது என்றாள். இந்த உரையாடலின் உள் அர்த்தம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தனது மகன் இறைவனின் அருட்கொடை என்பதால் அவரால் மட்டுமே திராட்சை ரசத்தை வரவழைக்க முடியும் என்று மரியாள் நம்பினாள். விதைப்பதற்கு ஒருகாலமும், அறுவடை செய்வதற்கு ஒருகாலமும் உண்டு என்பதுபோல் இயேசுவுக்கு சாதனைகளையும், போதனைகளையும் செய்வதற்கான காலம் ஏற்கனவே இறைவனால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனவே தனது நிலையை தெரிந்து கொண்ட இயேசு, தயங்கியவாறு,”எனது நேரம் இன்னும் வரவில்லை தாயே’ என்று கனிவுடன் பதில் அளித்தார். மரியாளுக்கும், இயேசுவுக்கும் இடையே நடந்த உரையாடல் இரண்டே வரிகள்தான். மகனிடம் தொடர்ந்து எதுவும் பேசாத மரியாள், அங்கிருந்த ஊழியர்களை அழைத்து “இயேசு சொல்வதை செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டு சென்றாள். அதன் பின்னர் தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீர் இயேசுவின் ஆசிர்வாதத்தால் திராட்சை ரசமாக மாறியது.
படை வீரர்கள் நுõறு பேருக்கு தலைவராக இருந்தவரின் மகன் மரணவேதனையில் துடித்துக் கொண்டிருந்தான். பெருந்திரளான கூட்டத்தின் மத்தியில் போதித்துக் கொண்டிருந்த இயேசுவிடம் வந்த படைத் தலைவன், தனது மகனை குணப்படுத்துமாறு வேண்டினான். வீட்டிற்கு வருவதாக கூறிய இயேசுவிடம், “அதற்கு நான் அருகதையற்றவன், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். எனது மகன் குணமடைவான்’ என்றார். அவரது நம்பிக்கை மகனை குணமாக்கிற்று.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்.