பொது மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை…!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை எல்லை பிரிவிட்குட்பட்ட பொதுமக்களின் குறை நிறைகளை கண்டறியும் பொறுட்டும், நகர சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்கிலும் ´பொது மக்களின் குறைதீர்க்கும் நடமாடும் சேவை´ இன்று 01 செவ்வாய்க்கிழமை புதிய காத்தான்குடி பதுரியா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபை விஷேட ஆணையாளரும், நகர சபை செயாலாளருமான ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையில் காத்தான்குடி நகர சபை வருமான வரி மேற்பார்வையாளர்களான நியாஸ் மற்றும் சுதர்ஷானந்தன், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.செல்வராசா உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நகர சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நடமாடும் சேவையில் காணிப்பிரச்சினை, எல்லைப்பிரச்சினை, மின்விளக்குகள் எரியாமை, வடிகான் துப்பரவு, வீதிப் பிரச்சினைகள், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வெற்றுக்காணிகள், சட்டவிரோத கட்டடங்கள், குப்பைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேரு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் நகர சபை செயலாளரினால் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரையில் காத்தான்குடி நகர சபை எல்லைப் பிரிவில் பராமரிக்கப்படாத மற்றும் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் 19 காணிகள் நகர சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் எமது நகர சபையினால் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்படும் சகல திட்டங்களுக்கும் பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
அப்போதுதான் சிறந்த கட்டமைப்புள்ள நகரசபைப் பிரிவாக காத்தான்குடிப் பிரிவை மாற்ற முடியும். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு ஏற்படுகின்ற நகரசபை சார்ந்த பிரச்சினைகளை நீங்கள் முன்வந்து முறையிடலாம். அவ்வாறு முறையிடும் பட்சத்தில்தான் அவற்றை இனங்கண்டு தீர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பொதுமக்கள் குறைதீர்க்கும் குறித்த நடமாடும் சேவை காத்தான்குடி-05 குபா ஜும்மாப் பள்ளிவாயலுக்கு அருகாமையிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating