மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்..!!
மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஹர்ஷா சவுதா ஷா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரேல் கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராத்திரி அன்று அவர் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஆண் குழந்தையை பிரசவித்த ஹர்ஷா சவுதா ஷா, கடந்த 1986-ம் ஆண்டு இதே மருத்துவமனையில் சோதனை குழாய் மூலம் பிறந்த குழந்தை ஆவார். தவிர, மும்பையின் முதல் சோதனை குழாய் குழந்தையும் இவரே ஆவார்.
சோதனை குழாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் சாதாரண மனிதர்களை போல் வாழ முடியாது. அவர்களுக்கு எளிதில் நோய் ஏற்படலாம், உடல் நலக்குறைவு ஏற்படலாம், இது மோசமான அறிவியல் கண்டுபிடிப்பு என பல விமர்சனங்களுக்கு மத்தியில் பிறந்த ஹர்ஷா சவுதா ஷா அன்று ஒரு அதிசய குழந்தையாகவே பார்க்கப்பட்டார்.
இன்றும் சோதனை குழாய் குழந்தைகள் பற்றிய விமர்சனம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் வளர்ந்து தாய் என்ற ஸ்தானத்தை அடைந்துள்ள ஹர்ஷா சவுதா ஷா, தன்னை சுற்றி உலவும் விமர்சனங்களை தகர்த்தெரிந்துள்ளார் என்றே கூறலாம்.
இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், சோதனை குழாய் குழந்தையான ஹர்ஷா சவுதா ஷா பிறக்க காரணமாக இருந்த டாக்டர் இந்திரா தான் இன்று அவருக்கு பிரசவமும் பார்த்துள்ளார். இதுகுறித்து டாக்டர் இந்திரா கூறியதாவது:-
இதை நம்ப மிகவும் கடினமாக இருக்கலாம். ஹர்ஷா சவுதா ஷா பிறந்த நாளில் இருந்து இதுவரை நாங்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனை குழாய் குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொடுத்துள்ளோம். இருந்தாலும், ஹர்ஷா சவுதா ஷா பிறந்ததினம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் அவளை நினைத்து பெருமைப்படுகிறேன்.
தாயும், சேயும் நலமாக உள்ளனர். சோதனை குழாய் குழந்தைகளாலும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்பது இதன் மூலம் ஒரு படி அதிகமாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating