ஐபோனின் தொழில்நுட்பப் பூட்டை உடைக்க புதிய வழியைக் கண்டுபிடித்திருப்பதாக FBI தெரிவிப்பு…!!
அப்பிள் நிறுவனத் தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பப் பூட்டை உடைத்து அதற்குள் புகுவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
சான் பெர்னாண்டினோ சம்பவத்தின் சூத்திரதாரியான சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனின் பாதுகாப்புப் பூட்டை உடைக்க ஐபோன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது.
கடந்த டிசம்பரில் 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தொடர்பான வழக்கில் சையத் ரிஸ்வானும் அவர் மனைவியும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். அந்த வழக்கின் புலனாய்வின் ஒரு பகுதியாக அவர்களின் ஐபோனை ஆராயவிரும்பும் அமெரிக்க அரசின் மத்திய புலனாய்வுத்துறையினர் (FBI) அதற்கு அப்பிள் நிறுவனம் உதவ வேண்டும் என்று கோரினார்கள்.
ஆனால், இந்தக் கோரிக்கையை அப்பிள் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.
அப்பிள் நிறுவனத்தின் மறுப்பை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கும் FBI, தற்போது இந்த வழக்கின் விசாரணையை சிலநாட்களுக்கு ஒத்திவைக்கும்படி நீதிமன்றத்தில் கோரியுள்ளது.
காரணம் ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைக்க ஒரு புதிய வழி இருப்பதாக அப்பிள் அல்லாத நிறுவனம் ஒன்று தம்மிடம் தெரிவித்திருப்பதாகவும் அதைப் பரிசோதித்துப்பார்க்க கால அவகாசம் தேவை என்றும் அதுவரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமெரிக்க நீதித்துறையின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது.
Average Rating