பெல்ஜியம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது..!!
பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் விலை மதிப்பில்லாத 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்துள்ளதாக பெல்ஜியம் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று, விமான நிலையத்துக்கு ஒரு டாக்சியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த சூட்கேஸ்களை வெவ்வேறு ‘டிராலி’களில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்துள்ளது.
முதலில் மூன்று பேர்களில் இருவர் மட்டும் பைகளில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இன்னொருவன் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்காமல் அங்கிருந்து ஓடியிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஸவன்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய இரு தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கும் இடையில் முன்னர் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தற்போது புரூசெல்ஸ் நகர போலீசார் நடத்திவரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான சலா அப்துஸ்ஸலாம் என்ற தீவிரவாதியை பிடிக்க புரூசெல்ஸ் நகரில் சில சந்தேகத்துக்குரிய வீடுகளில் போலீசார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அவற்றில் ஒரு வீட்டில் குடியிருந்த காலித் பக்ரோவி மற்றும் அவனது தம்பியான பிராஹிம் அல் பக்ரோவி ஆகியோர் நேற்று ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர் என பெல்ஜியம் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே சில கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், எனினும், இவர்கள்மீது தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான எந்த குற்றச்சாட்டும் இதற்கு முன்னர் வந்ததில்லை எனவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
Average Rating