பெல்ஜியம் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3–வது தற்கொலை படை தீவிரவாதி சிக்கினான்…!!
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த 22–ந் தேதி தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 31 பேர் பலியாகினர். 300 பேர் காயம் அடைந்தனர்.
பிரசல்ஸ் விமான நிலையத்தில் 3 தீவிரவாதிகளும், மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு தீவிரவாதியும் புகுந்தனர், அவர்களில் விமான நிலையத்தில் குண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்திய போது 2 தீவிரவாதிகள் மட்டுமே வெடித்து சிதறி உயிர் விட்டனர்.
குண்டு வெடித்த போது அவர்களுடன் வந்த 3–வது தற்கொலை படை தீவிரவாதி தூக்கி வீசப்பட்டான். அவன் கையில் இருந்த சூட்கேஸ் மட்டும் தவறி விழுந்து விட்டது. எனவே அது வெடிக்கவில்லை. அதற்குள் அந்த தீவிரவாதி பொதுமக்களுடன் சேர்ந்து கூட்டத்துடன் கூட்டமாக சேர்ந்து தப்பி ஓடிவிட்டான். இக்காட்சிகள் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியுள்ளன.
இதை வைத்து தப்பி ஓடிய தீவிரவாதியின் பெயர் பைசல் செபோயு என தெரிய வந்தது. எனவே அவனை பிடிக்க பிரசல்ஸ் மெய்சர்பிளைன் பகுதியில் போலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள். அப்போது அங்கு டிராம் ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெடிகுண்டுகள் அடங்கிய பை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த நபர் விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய 3–வது தீவிரவாதி பைசல் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் பெல்ஜியம் போலீசார் தகவல்கள் தர மறுத்து விட்டனர். ஆனால் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பைசல் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் இல்லை. ஆனால் அபு பக்கர் மற்றும் ரபாப் என் ஆகிய 2 பேர் இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது அடுத்த வாரம் பாரீசில் மேலும் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாரீசில் நடத்தப்பட இருந்த வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விமான நிலையத்தில் 3–வது தற்கொலை படை தீவிரவாதி பைசல் விட்டுச்சென்ற வெடி குண்டுகள் கைப்பற்றப் பட்டு செயல் இழக்க செய்யப்பட்டன. சக்தி வாய்ந்த அந்த குண்டுகள் வெடித்து இருந்தால் மேலும் 100–க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
Average Rating