இறந்த தாய் யானையின் மடியில் பால் குடிக்க முயன்ற குட்டி யானை – நெஞ்சை நெகிழ வைத்த பாசப்போராட்டம்..!!
இறந்து கிடந்த தாயின் யானையின் மடியில் குட்டி யானை பால் குடிக்க முயன்ற சோக சம்பவம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள தோட்டங்களுக்கு வந்து செல்கிறது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் மரணத்தையும் தழுவி வருகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை சுண்டப்பட்டி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான பாக்கு – தேக்கு தோப்பு உள்ளது. இங்கு ஒரு பெண் காட்டு யானை இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பத்மா, மேட்டுப்பாளையம் வன சரக அலுவலர் நசீர், வனவர் ரவி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது இறந்து கிடந்த யானை அருகில் ஒரு பெண் யானை குட்டியுடன் நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து வனத்துறையினரால் அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் இறந்து கிடந்த அந்த தாய் யானையின் மடியில் குட்டி யானை ஓடிவந்து பால் குடிக்க முயன்றது. ஆனால் பால் குடிக்க முடியாததால் குட்டி யானை பிளிறியது. இந்த சோக சம்பவம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தது. மேலும் தனது தாயின் துதிக்கையை பிடித்து இழுத்தவாறு இருந்தது. நீண்ட நேரமாகியும் அங்கிருந்து செல்ல குட்டி யானை மறுத்தது. இந்த பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ செய்தது. ஒருவழியாக மதியம் 2 மணிக்கு மேல் தான் குட்டி யானை அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஆனாலும் மற்றொரு பெண் யானையுடன் குட்டி யானை அங்கேயே வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து 3 மணிநேரம் போராடி 2 யானைகளையும் விரட்டினர். பின்னர் இறந்து கிடந்த யானை அருகே சென்று பரிசோதனை செய்தனர். தேக்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பாகங்கள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு கோவை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்த யானை அங்கேயே புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனசரக அலுவலர் நசீர் கூறும்போது, இறந்து கிடந்த பெண் யானைக்கு சுமார் 18 வயது இருக்கும். குடலில் புழுக்கள் அதிகமாக காணப்பட்டது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்புதான் யானை எப்படி இறந்தது? என்று தெரியவரும் என்றார்.
Average Rating