உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தீப்பற்றி எரிந்தது: 35 பயணிகள் உயிர் தப்பினார்கள்..!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று மாலை 3.30 மணியளவில்அரசு பஸ் திருக்கோவிலூருக்கு புறப்பட்டு சென்றது. இதில் 35 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது 4 வழி சாலையில் உள்ள குமாரமங்கலம் என்ற இடத்தில் டிரைவர் வரதராஜன் பஸ்சை நிறுத்தினார். அங்கு பயணிகள் இறங்கிய பின் பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது.
அப்போது சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ்மூர்த்தி(வயது 53) என்பவர் ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அந்த பஸ்சின் பின் பக்கத்தில் வேகமாக மோதியது. அந்த காரில் ஏ.சி. இருந்ததால் மோதிய வேகத்தில் திடீரென தீப்பற்றியது. உடனே காரில் இருந்த சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(53), இந்திராநகர் பாலாஜி(54), மந்தைவெளி சீனிவாசன்(53) ஆகியோர் இறங்கி ஓடினர்.
இந்நிலையில் காரில் பற்றி எரிந்த தீ, மளமளவென பஸ்சின் மீதும் பற்றி ‘குபுகுபு’வென எரிய தொடங்கியது. இதனால் பஸ்சில் இருந்த 35 பயணிகள் அலறியடித்துக் கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் பஸ்சும், காரும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பழனிவேல் தலைமையில் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் கார், பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் அங்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அங்கு போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர்.
இந்த விபத்தில் கார் டிரைவர் மகேஷ்மூர்த்தி, அவருடன் வந்த பாலாஜி ஆகியோர் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் பஸ் பயணிகள் 35 பேரும், காரில் பயணம் செய்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating