20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் மர்மச்சாவு…!!
20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் மர்மமான முறையில் இறந்தார்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ் பூரைச் சேர்ந்தவர் கிர்பால் சிங் (50). கடந்த 1992-ம் ஆண்டு இவர் வாகா எல்லையை தவறுதலாக கடந்து பாகிஸ்தானுக்குள் சென்று விட்டார்.
அதை தொடர்ந்து அவர், பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முதலில் இவர் உளவு பார்த்ததாக அவர் மீது வாகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வெடி குண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு லாகூரின் கோட்லாக் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் உரிய ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட வில்லை. எனவே அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் சிறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சிறையிலும் அவருடன் இருந்தவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் இறந்ததாக அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தற்போது கிர்பால் சிங் உடல் பிரேதபரிசோதனைக்காக லாகூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating