அயனாவரத்தில் பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து ரவுடிக்கு அரிவாள் வெட்டு…!!
அயனாவரத்தில் இன்று பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து ரவுடியை 5 பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.
ஆவடியை அடுத்த பூம்பொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (28). பிரபல ரவுடி. இவர் மீது தலைமை செயலக போலீசில் ஒரு கொலை வழக்கும், அயனாவரம் மற்றும் ஐ.சி.எப். போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் இவர் ஆவடியில் இருந்து புரசைவாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். வழியில் ஓட்டேரியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு சென்று தனது நண்பரை பார்த்து விட்டு அயனாவரம் வந்தார்.
அங்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் இவரை வழிமறித்தது. அவர்களை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் போட்டு விட்டு கார்த்திக் ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அக்கும்பல் அவரைவிடவில்லை. பெரிய அரிவாள் மற்றும் கத்தியுடன் அவரை விரட்டியது. இதனால் உயிருக்கு பயந்த கார்த்திக் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தார்.
கும்பலிடம் இருந்து தப்பிக்க அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கும் அவரை அக்கும்பல் விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அதில் அவரது தலை, கை, கால், கழுத்து உள்ளிட்ட உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது.
இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய கார்த்திக் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதற்கிடையே அவரை வெட்டிய கும்பல் ரத்தக்கறை படிந்த அரிவாள் மற்றும் கத்திகளுடன் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறி தங்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறி ரோட்டில் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேலு தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஏற்கனவே நடந்த கொலைக்கு பழி வாங்க கார்த்திக் வெட்டப்பட்டாரா? அல்லது வேறு பிரச்சினையால் இச்சம்பவம் நடந்ததா? என தெரியவில்லை. மேலும் அவரை வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating