ஆரணி அருகே இன்று மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி..!!
ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). விவசாய கூலி. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு செல்வம் (30), கார்த்திக் என்று 2 மகன்கள் இருந்தனர். ஜெயராமனுடன் மனைவி மற்றும் மூத்த மகன் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வந்தனர். இளைய மகன் கார்த்திக் மட்டும் பெங்களூரில் தங்கி வேலை பார்க்கிறார்.
இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பாலுவின் விவசாய நிலத்தில் ஜெயராமன் தனது மனைவி, மகனுடன் சில நாட்களாக வேலை செய்து வந்தார். தினமும் அவர்கள் 3பேரும், நிலத்திற்கு சென்று களையெடுப்பது, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தனர்.
இதற்கிடையே அலமேலு தங்கைக்கு திடீரென உடல் நிலை பாதித்தது. அவரை பார்ப்பதற்காக அலமேலு ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் ஜெயராமன், அவரது மகன் செல்வம் ஆகிய 2 பேரும் வழக்கம் போல் இன்று காலையில் வேலைக்கு சென்றனர். நிலத்தின் வரப்பில் நடந்து சென்றனர். அப்போது, உயர்மின் அழுத்தம் கொண்ட மின்சார வயர் ஒன்று நிலத்தின் வரப்பில் அறுந்து கிடந்தது.
இதை கவனிக்காமல் ஜெயராமனும், செல்வமும் மின்வயரை மிதித்தனர். இதில், அவர்கள் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட 2 பேரும் துடிதுடித்து சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நிலத்திற்கு சென்ற தந்தை, மகனின் வேலையை மேற்பார்வையிடுவதற்காக நிலத்தின் உரிமையாளரான முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர் பாலு சென்றார்.
அப்போது தந்தை, மகனும் மின்சாரம் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னராஜ் மற்றும் போலீசார், தாசில்தார் கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன், வருவாய் ஆய்வாளர் குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன் ஆகியோரும் விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தந்தை, மகனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தங்கையை பார்ப்பதற்காக ஊருக்கு சென்ற அலமேலு இன்று கணவன், மகனுடன் வேலைக்கு வந்திருந்தால் அவருக்கும் இதே நிலை தான் ஏற்பட்டு இருக்கும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating