சிறுமிகள் இருவர் சித்திரவதை; சிறிய தந்தையும் கைது..!!
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் சகோதரிகளாகிய சிறுமிகள் இருவரை சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அச்சிறுமிகளின் சிறிய தந்தையை சனிக்கிழமை (04) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
எட்டு மற்றும் பத்து வயதுகளையுடைய இச்சிறுமிகள் இருவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, இச்சிறுமிகள் வசித்துவந்த ஏறாவூர் நகரில் உள்ள வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், சிறுமிகளைப் பரிசோதித்தபோது அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான உடற்தழும்புகள் காணப்பட்டன.
இந்நிலையில், இந்தச் சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இச்சிறுமிகளின் சிறிய தாய் (வயது 48) கடந்த புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டு, அவருக்கு நான்கு மாதக் குழந்தை இருப்பதன் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
‘சிறிய தாயின் கணவரும் தங்களைச் சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளார். தேநீருக்குள் உப்புக்; கலந்தும் உணவை உட்கொள்ள முடியாதளவுக்கு அதில் மிளகாய்த்தூள் கலந்தும் தந்துள்ளார். அத்துடன், இரவு வேளைகளில் தங்களுக்கு உறக்கத்தில் அடி ஆக்கினைகள் தந்ததுடன், சூடு வைத்து எழுப்பி வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணித்துள்ளார்’ இச்சிறுமிகள் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.
‘மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தங்களின் தாய் சென்றுள்ளார். இதேவேளை, தந்தை பொலன்னறுவையில் அவரது தாயாருடன் வசித்து வருகின்றார். தாய் மத்திய கிழக்கு நாட்டுக்குச் செல்லும்போது, தங்களை அவரது தங்கையான தமது சிறிய தாயிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இச்சிறுமிகளின் பராமரிப்பாளராக இருந்துவந்த தாயின் சகோதரியும் மற்றும் அவரது உறவினர்களும் தொடர்ந்து தங்களை சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளனர்” என ஏற்கெனவே அச்சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சிறுமிகள் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது
Average Rating