வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கடலூர் வாலிபர் கொலை: வீடியோ ஆதாரம் இருப்பதாக அண்ணன் பரபரப்பு புகார்…!!
கடலூர் முதுநகர் கிஞ்சன்பேட்டையை சேர்ந்தவர் பத்மாபன் (வயது 34). இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் வந்தது.
ஆனால் அவர் சாவில் மர்மம் இருப்பதாக பத்மநாபனின் அண்ணன் மகாதேவன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
என்னுடைய தம்பி பத்மநாபன் கடந்த 2014–ம் ஆண்டு புதுவையை சேர்ந்த கணேசன் மூலமாக வெளிநாட்டுக்கு சென்றார். அங்கு அவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதையடுத்து எங்களிடம் பேசிய அவன் சம்பளம் பற்றி நிர்வாகத்திடம் பேசி வருவதாக கூறி இருந்தான்.
மேலும் வேலை எனக்கு பிடிக்கவில்லை, சம்பளமும் சரியாக வழங்காததால் நான் ஊருக்கு வந்துவிடுவேன் என்று கூறி இருந்தான்.
இந்நிலையில் கடந்த 21–4–2016 அன்று என்னுடைய தம்பி தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அங்கு வேலை பார்க்கும் எங்கள் ஊரை சேர்ந்த சிவக்குமார் கூறினார். இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் மாவட்ட கலெக்டரின் முயற்சியால் அவனுடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்தோம்.
இதற்கிடையில் என்னுடைய தம்பி பயன்படுத்திய செல்போனில் உள்ள சில வீடியோ ஆதாரங்கள் மூலம் அவன் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவனுடைய முதலாளியே கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டது போல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மறு விசாரணை நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை மாவட்ட கலெக்டர், முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு, சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்துக்கும் மகாதேவன் அனுப்பி உள்ளார்.
Average Rating