திருமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மாயம்: கடன் தகராறில் தலைமறைவு?
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது55). இவர், தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி (45). இவர்களுக்கு கார்த்திகேயன் (25), தாமோதரன் (24) என்ற மகன்களும், பத்மபிரியா (21) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் என்ஜினீயரிங் படித்துள்ளனர். மகள் பி.எஸ்.சி. படித்துள்ளார்.
குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்ப செலவுகளுக்காக கார்மேகம் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3–ந்தேதி முதல் கார்மேகத்தின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கோவையில் உள்ள கவுரியின் தந்தை ராசப்பன் (73)க்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது மகள் உள்பட 5 பேரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
அவர் பல இடங்களில் தேடியும் கார்மேகம் மற்றும் குடும்பத்தினரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசில் ராசப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் மாயமான விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பிரச்சினை காரணமாக அவர்கள் மாயமானார்களா? அல்லது வேறு யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating