ஆம்பூர் அருகே மனைவி கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை…!!
ஆம்பூர் அருகே உள்ள உமராபாத், கடாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கருணா (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஆம்பூர் அருகே உள்ள அயித்தம்பட்டு ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த காசி என்பவரது மகள் ரஞ்சனியை(23) திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரஞ்சனி துத்திப்பட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் அவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர்.
இன்று காலையும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கருணா அங்கிருந்த கத்தியை எடுத்து ரஞ்சனியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் ரஞ்சனி கீழே சாய்ந்து விழுந்தார்.
பாதி உயிருடன் விழுந்த அவர் இறந்துவிட்டார் என்று கருணா நினைத்து அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரத்தில் இப்படி நடந்து கொண்டோமே என்று நினைத்து மனம் வருந்திய அவர் தற்கொலை முடிவுக்கு வந்தார்.
அதன்படி வீட்டுக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தை அங்கிருந்த மகனும், மகளும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாயை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.
அங்கு ரஞ்சனி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதையும், கருணா தூக்கில் பிணமாக தொங்குவதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கருணாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய ரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating