தண்டையார்பேட்டையில் ஷேர்ஆட்டோவில் மாணவியை கடத்த முயற்சி: 2 வாலிபர்களை போலீஸ் தேடுகிறது…!!
புதுவண்ணாரப்பேட்டை கார்ப்பரேசன் சந்து பகுதியில் வசித்து வருபவர் மீன்பகதூர். நேபாளத்தை சேர்ந்த இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது 14 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று காலை பள்ளிக்கு செல்ல ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினாள். அதில் ஒரு பெண் பின்புறம் அமர்ந்து இருந்தார். டிரைவர் அருகே வாலிபர் ஒருவர் இருந்தார்.
வழியில் அந்த பெண் இறங்கி விட்டார். ஆட்டோவில் மாணவி மட்டும் இருந்தார். முன்னாள் அமர்ந்து இருந்த வாலிபர், பின்புறம் வந்து மாணவி அருகே அமர்ந்து கொண்டார்.
உடனே ஆட்டோவை வேறு பாதையில் டிரைவர் திருப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். அருகில் அமர்ந்திருந்த வாலிபர் கைக்குட்டையால் மாணவி வாயை பொத்தினார்.
தண்டையார்பேட்டை சிக்னலில் ஆட்டோ நின்ற போது மாணவி திமிறியதை கண்டு வாகன ஓட்டிகள் 2 வாலிபர்களிடம் விபரத்தை கேட்டனர். அதற்கு அவர்கள் மாணவி பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம் பிடிப்பதாக கூறினார்கள்.
பொதுமக்கள் கேள்வி கேட்டதால் சுதாரித்துக் கொண்ட 2 பேரும் மாணவியை கீழே இறக்கிவிட்டு சென்று விட்டனர். வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating