குழந்தையின் மேல் சிந்திய கொதிக்கும் சாம்பார்… சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பலி…!!
கோவை மாவட்டத்தில் கொதிக்கும் சம்பார் சிந்தியதில், மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கணபதி நகரை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி நந்தினி (26). உக்கடம் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் நந்தினி, சமையல் வேலை செய்வதற்காக கடந்த 16-ஆம் தேதி, அவரது தாயார் மாணிக்கத்துடன் சென்றுள்ளனர்.
அவர்களுடன் நந்தினியின் மூன்று வயது ஆண் குழந்தை உதயபிரகாசையும் அழைத்து சென்றுள்ளனர்.
சமையல் வேலையின் போது, அடுப்பில் கொதிக்க கொதிக்க இருந்த சாம்பார் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, அவர்கள் சமையல் வேலைகளை கவனித்துள்ளனர்.
அப்போது, நந்தினியின் குழந்தை உதயபிரகாஷ், கொதிக்கும் நிலையில் இருந்த சாம்பார் பாத்திரத்தை இழுத்ததில், பாத்திரம் கவிழ்ந்து அதில் இருந்த சாம்பார் குழந்தையின் மீது சிந்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த குழந்தைக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating