யாழ்.வங்கி போலி நாணய தாள்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியானது…!!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வங்கி ஒன்றின் ஊடாக போலி நாணய தாள்கள் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த போலி நாணய தாள்களை பெண் ஒருவர் அச்சிட்டு வங்கியிலிருந்து பெற்ற பணத்திற்குள் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மானிப்பாய் பகுதியில் திருமண வீடு ஒன்றுக்காக தனியார் வங்கி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தொகை பணத்தினை திருமண மண்டபத்திற்கு கொடுத்தபோது திருமண மண்டபத்தில் இருந்தவர்களால் அந்தப் பணம் போலி பணம் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக, பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் குறித்த பணத்தை தாம் தனியார் வங்கியில் இருந்து எடுத்து கொண்டதாகவும் அது வங்கியிலேயே மோசடி இடம்பெற்றதாகவும் பணத்தை எடுத்து வந்திருந்தவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தொடர் விசாரணைக்கான பொறுப்பு புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வங்கியில் இருந்து எடுத்த பெண் அந்த பணத்திற்குள் போலி நாணய தாள்களை கலந்து திருமண மண்டபத்திற்கு கொடுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கலக்கப்பட்ட போலி நாணயத்தின் பெறுமதி 2 இலட்சம் ரூபாய் எனவும் மேலும் இவர் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நகர் பகுதியிலுள்ள பிரபல்யமான அச்சகம் ஒன்றுக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் தன்னை ஒரு ஆசிரியர் என அடையாளப்படுத்தி பாடசாலை தேவைகளுக்காக தமக்கு பணம் அச்சிட்டு கொடுக்குமாறு கேட்டு பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் இன்று விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating