மதுரை மாவட்டத்தில் குற்ற பின்னணியில் உள்ள 150 ரவுடிகள் கைது: போலீஸ் நடவடிக்கை தீவிரம்…!!
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராதிகா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். திலகர் திடல், அண்ணாநகர், திருப்பரங்குன்றம், கரிமேடு, திடீர்நகர், தல்லாகுளம், மதிச்சியம், தெற்குவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த 35 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மதுரை புறநகர் பகுதியில் கடந்த 3 நாட்களில் 115 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்களிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெற்று அவர்களது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
மதுரை மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் ரவுடிகள் மீதான கண்காணிப்பு வளையத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.
Average Rating