லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 7 பேர் பரிதாப பலி
லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித்தாக்குதல் மற்றும் வான்வெளி தாக்குதல் ஆகியவற்றை மிகக் கொடூரமான முறையில் தொடுத்தது. இஸ்ரேலிய கமாண்டோ படை வீரர்கள் ஹிஸ்புலா தீவிரவாதிகள் நடத்திய மருத்துவமனை ஒன்றை தாக்கி நாசமாக்கினர். இஸ்ரேலிய படை நடத்திய வான்வெளி தாக்குதலில் கிழக்கு நகரமான பீல்பெக் நகரில் அப்பாவி மக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் கூறுகையில், இஸ்ரேலிய படைகள் ஏராளமான கொரில்லா முகாம்களை தாக்கி அழித்ததாகவும், தீவிரவாதிகள் பலர் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தது.
ஆனால், தங்கள் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பத்திரமாக திரும்பி விட்டனர் என்றும் இஸ்ரேல் ராணுவம் பெருமையோடு தெரிவித்தது.
இஸ்ரேலிய படைகள் பீல்பெக் என்ற இடத்தில் ஒரு மருத்துவமனையை தரைமட்டமாக்கியதாக அரபு டி.வி. செய்திகள் தெரிவித்தன. ஹிஸ்புலா தீவிரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ராக்கெட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகின்றன. லெபனானை நாசமாக்கியே தீருவது என்ற முடிவோடு படைகள் கங்கணம் கட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த பிரச்னைக்கு ஒரு வாரத்தில் தீர்வு ஏற்படும் என அமெரிக்க மந்திரி கான்டலிசா ரைஸ் கூறியிருந்தார். ஆனால் நிலைமை போகிற போக்கை பார்த்தால் தாக்குதல் பல வாரங்கள் நீடிக்கலாம் என்றே தெரிகிறது.