தந்தையை பழிவாங்க கர்ப்பிணி மகள் உயிரோடு எரித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்…!!
தந்தையால் ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் விதமாக அவரது மகளை கணவரின் வீட்டார் எரித்துக்கொன்ற சம்பவம் பெண்கள் உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தை சேர்ந்தவர் முகம்மது ஆசம். இவரது 14 வயது மகள் சாராவை அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்த குடும்பத்தினர் ஆசமுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால், அவர்களின் சகோதரி ஒருவரை ஆசமுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதனிடையே அதிக பணம் தருவதாக வேறொரு நபர் அவர்களிடம் வாக்கு அளித்ததால் அந்த பெண்ணை பணம் அதிகம் தரும் நபருக்கு மணம் முடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட பெண்மணி முகம்மது ஆசமுடன் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தினர் ஆசமின் மகள் சாரா மீது தங்கள் கோபத்தை காட்டியுள்ளனர்.
கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் தீ வைத்து எரித்துள்ளனர். இதில், படுகாயமடைந்த அந்த இளம்பெண் காபூல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ஆசம் தமது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி காபூல் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ஆசம், அவரது குடும்பத்தினர், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் பேரணியும் நடத்தினர்.
கோர் மாகாணத்தில் மட்டுமல்ல ஆப்கானின் ஒட்டுமொத்த பகுதியிலும் மனித உரிமை மீறல்களும், பாலியல் வன்கொடுமைகளும், கவுரவக் கொலைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
Average Rating