சித்தியுடன் 3 வயது குழந்தை சிறையில் அடைப்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு…!!
மதுரை விளாச்சேரியைச் சேர்ந்தவர் மேரி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான், என் கணவர் முருகன், சகோதரி மாரியம்மாள், அவருடைய கணவர் குருவன் ஆகியோர், மதுரையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள நல்லூர் பகுதியில் களிமண் சிலைகளை விற்பதற்காக சென்றோம்.
அப்போது என் 3 வயது குழந்தை விஜய் எங்களுடன் இருந்தான். கடந்த மாதம் 21-ந்தேதி என்னை தவிர மற்ற 4 பேரையும் குமரி மாவட்ட போலீசார் ஜீப்பில் ஏற்றி சென்றனர். அவர்களை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது 3 வயது குழந்தையை தவிர மற்ற 3 பேரையும் குற்ற வழக்கில் மார்தாண்டம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் குழித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 வயது குழந்தை சித்தி மாரியம்மாளுடன் சிறையில் உள்ளது என்று அரசு வக்கீல் தெரிவித்தார்.
குழந்தையின் தாயார் வெளியில் இருக்கும் நிலையில் எந்த அடிப்படையில் குழந்தையை மாரியம்மாளுடன் சிறைக்கு அனுப்பி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்து அனைத்து ஆவணங்களுடன் குழித்துறை மாஜிஸ்திரேட்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல் தாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குழித் pதுறை மாஜிஸ்திரேட்டு சண்முகராஜ், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மதுரை மத்திய சிறையில் இருந்த 3 வயது குழந்தை, சித்தி மாரியம்மாள் மூலம் ஆஜர்படுத்தப்பட்டது. மனுதாரர் மேரி தரப்பில் வக்கீல் ஆர்.கருணாநிதி ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
தாயார் வெளியில் இருந்த நிலையில் 3 வயது குழந்தையை சித்தியுடன் சிறையில் அடைக்க உத்தரவிட்டது எப்படி? என்று குழித்துறை மாஜிஸ்திரேட்டு எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது டி.ஜி.பி. துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையை தாயார் மேரியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.
நீதிபதிகளின் உத்தரவை தொடர்ந்து ஐகோர்ட்டுக்கு வந்திருந்த மேரி குழந்தையை பெற்றுக்கொண்டு தன்னுடன் அழைத்து சென்றார்.
Average Rating