கொல்லம் அருகே 6 வயது சிறுவனை கொன்று கிணற்றில் வீசிய தந்தை…!!
கொல்லம் அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, (வயது 37). இவரது மனைவி ராஜு மோள். இந்த தம்பதியின் மகன் வாசுதேவ் (6). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வாசுதேவ் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
ராஜுமோள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் இரவு பணிக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். அங்கிருந்து செல்போனில் கணவரை தொடர்பு கொண்டார்.
அப்போது சிறிது நேரம் கழித்து பேசுவதாககூறி விட்டு பாபு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன் பிறகு மீண்டும் கணவரை ராஜுமோள் செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் காலை ராஜுமோள் வீட்டிற்கு வந்த போது, கணவர் பாபு மற்றும் மகன் வாசுதேவ் வீட்டில் இல்லை.
இதனால் பதறிப்போன ராஜுமோள், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. கணவரின் செல்போனிலும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.
இதனால் அவர், பெரும்பாவூர் போலீசில் கணவர், மகன் மாயமானது பற்றி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜுமோளின் உறவினர் ஒருவரின் வீட்டு கிணற்றில் ஒரு சாக்குமூட்டை மிதந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சாக்கு மூட்டைக்குள் சிறுவன் வாசுதேவ் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அந்த சிறுவனை யாரோ கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி இருந்தது தெரிய வந்தது. அதே சமயம் பாபு பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையில் பாபு, பெரும்பாவூர் போலீசில் சரண் அடைந்தார்.
போலீசாரிடம் அவர் கடன் தொல்லை காரணமாக தனது மகனை கொன்று பிணத்தை கிணற்றில் வீசியதாகவும், தானும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அதற்கு துணிச்சல் இல்லாததால் சோட்டாணிக்கரை கோவிலுக்கு சென்று தலையை மொட்டை அடித்து விட்டு கோவில் கோவிலாக சுற்றியதாகவும் மகனை கொன்ற வேதனை தன்னை வாட்டியதால் போலீசில் சரண் அடைந்ததாகவும் கூறினார்.
இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லைக்காகத்தான் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating