இவைகளும் மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் என்பதை மறவாதீர்கள்..!!
இன்றைய காலக்கட்டத்தில் நோய்கள் மற்றும் உடல்நல கோளாறுகளின் பெருக்கத்தால், திருமணத்திற்கு பின் நிறைய தம்பதிகளால் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் நிறைய தம்பதிகள், தங்களை துரதிர்ஷ்டசாலிகளாகக் கருவதோடு, வாழ்வதற்கே தகுதியற்றவர்களாக நினைக்கின்றனர்.
ஆனால் ஒருவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், இனப்பெருக்க மண்டல கோளாறு, விந்தணு குறைபாடு, விறைப்புதன்மை பிரச்சனை, புகைப்பிடித்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன.
இருப்பினும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து, முறையான சிகிச்சைகளை ஆரம்பத்திலேயே மேற்கொண்டு வந்தால், மலட்டுத்தன்மை அடைவதைத் தடுக்கலாம். இங்கு அந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அறிகுறி #1
ஆறு மாதங்களாக கருத்தரிப்பதற்கு முயற்சி செய்தும், கருத்தரிக்க முடியாவிட்டால், அது மலட்டுத்தன்மைக்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம்.
அறிகுறி #2
மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளியில் ஏற்படாமல் இருந்தால், மலட்டுத்தன்மைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இம்மாதிரியான நேரத்தில் PCOD பரிசோதனையை உடனே செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
அறிகுறி #3
மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக உதிரப் போக்கு ஏற்பட்டால், அதுவும் 5 நாட்களுக்கு மேல் இந்நிலை நீடித்தால், உடனே மருத்துவரை சந்தித்து, சோதனை செய்து கொள்ள வேண்டும். இதுவும் மலட்டுத்தன்மைக்கான ஓர் அறிகுறியாகவும் இருக்கலாம்.
அறிகுறி #4
மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத அளவில் கடுமையான வயிற்று வலியை 2 நாட்களுக்கு மேல் சந்தித்தால், அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் எண்டேமெட்ரியோசிஸ் என்னும் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவே மருத்துவரை சந்தித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.
அறிகுறி #5
உடல் முழுவதும் சிஸ்டிக் பருக்கள் திடீரென்று அதிகம் வர ஆரம்பித்தால், அதுவும் 20 வயதிற்கு மேல் அல்லது 30 வயதின் ஆரம்பத்தில் ஏற்படுமாயின், அது மலட்டுத்தன்மைக்கு காரணமான PCOD பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
அறிகுறி #6
ஆண்களின் விதைப்பையில் வீக்கம் இருந்தால், அந்நிலைக்கு வெரிகோசேலே என்று பெயர். இந்த நிலை நீடித்தால், அது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
அறிகுறி #7
உடலுறவில் ஈடுபடும் போது அல்லது சுய இன்பம் காணும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தும் விந்து வெளியேறாமல் இருப்பின், அதுவும் மலட்டுத்தன்மைக்கான அறிகுறி. எனவே ஆண்களே! கவனமாக இருங்கள்.
Average Rating