கனவில் தோன்றும் அம்மன் சிலையை பற்றி பொலிஸில் முறைப்பாடு! இரண்டு மணிநேர தேடுதல் வேட்டை…!!
மன்னார் எழுத்தூர் செல்வ நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் ‘அம்மன் சிலை’ ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த வீட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இன்று மதியம் 12.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்ட போதும் குறித்த அகழ்வில் இருந்து எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எழுத்தூர் செல்வநகர் கிராமத்தில் ஆசிரியர் ஒருவரது வீட்டு வளாகத்தில் அம்மன் சிலை ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சிலை தொடர்பாக அடிக்கடி கனவு ஏற்பாடுவதாகவும், அதனைத் தொடர்ந்து தனது வீட்டில் இனம் தெரியாத நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இதனால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் கடந்த 27ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் தேடுதல் பணிகள் ஆரம்பமானது. இதன் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், தடவியல் நிபுனத்துவ பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் அடையாளம் காணப்பட்ட பகுதி தோண்டப்பட்டது.
சுமார் 2 மணித்தியாலங்கள் வரை அடையாளம் காணப்பட்ட பகுதி தோண்டப்பட்டது. 10 அடி வரை தோண்டப்பட்ட போதும் எதிர்பார்த்த அம்மன் சிலையோ அல்லது வேறு எந்த தடையப்பொருட்களோ மீட்கப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த இடத்தை தோண்டும் பணி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating