வரலாறு காணாத பேய் மழை: சூரத்தில் 100 பேர் பலி; ரோடுகளில் பிணங்கள் மிதக்கின்றன
குஜராத்தில் 2 வாரமாக தொடர்ந்து பேய் மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் தெற்கு பகுதிகள் கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தில் மிதக்கிறது. இதில் சூரத் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள தப்தி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வந்தது. இதனால் அதன் குறுக்கே உள்ள உகாய் அணை யில் இருந்து ஒரே நேரத்தில் 10 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த வெள்ளம் சூரத் நகரத்தையும், சுற்றியுள்ள பகுதியையும் சூழ்ந்து கொண்டது. நகருக்குள் 10 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து விட்டது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியாமல் அப்படியே உள்ளது.
உகாய் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சூரத்துக்குள் தேங்கிய வெள்ளம் குறையவில்லை. அனைத்து வீடுகளிலும் தரை தளம் முழுவதும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் 2-வது மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். முதல் மாடியில் மட்டும் இருப்பவர்கள் கூரைகளில் அமர்ந்து உள்ளனர். 1 லட்சம் வீடுகளுக்கும் மேல் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.
வெள்ளத்தில் சிக்கி ஏராளமான பேர் பலியாகிவிட்டார்கள். சூரத் நகரில் மட்டும் இதுவரை 100 பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான பேரை காணவில்லை. அவர்களும் இறந் திருக்கலாம் என கருதப்படுகிறது. சாலைகளில் தேங்கிய தண்ணீரில் பிணங்கள் மிதந்தபடி இருக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை இன்னும் முழுமையாக மீட்கவில்லை. சில இடங்களில் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை இருக்கிறது. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 60 சதவீத பகுதிகளில் மின்சாரம் இல்லை.