ராஜமௌலியின் அண்ணனும் இயக்குனர் ஆகிறார்…!!
‘நான் ஈ’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ ஆகிய பிரம்மாண்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணன் எஸ்.எஸ்.காஞ்சி தற்போது இயக்குனராக மாறியிருக்கிறார். தெலுங்கு திரையுலகில் பிரபல கதாசிரியராக விளங்கிய எஸ்.எஸ்.காஞ்சி, ராஜமௌலியின் படங்களிலும் இவருடைய பங்களிப்பும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ராஜமௌலியைத் தொடர்ந்து தற்போது எஸ்.எஸ்.காஞ்சியும் இயக்குனராக மாறியிருக்கிறார். இவர் இயக்கும் புதிய படத்திற்கு ‘காட்சி நேரம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ரணதீர் நடிக்கிறார். ருக்சார் மீரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், கார்த்திக், சத்யா, அப்ஜித் சர்மா, ஆதித்யா ஆகியோர் வில்லனாக நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, இன்றைய சமுதாயம் ஒழுக்கமான முறையில் இருந்து எவ்வாறு சீரழிந்து கொண்டு போகிறது என்பதை விஷுவல் மீடியாவுக்கே உரிய அழுத்தமான காட்சிகளோடு அம்பலப்படுத்துகிற படமாக இது இருக்கும். இந்த படத்தின் கதை ஒரு மாடர்ன் தம்பதியினரைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரவுடித்தனம் பண்ணும் முரட்டுத்தனமான படித்த நான்கு இளைஞர்களுக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையே எதிர்பாரத ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையால் என்ன விபரீதங்கள் நடக்கின்றன. மக்களின் இன்றைய மனநிலையும், அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தனத்தையும் வெளிக்காட்டுவதாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மரகத மணி இசையமைக்கும் இப்படத்திற்கு பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுதிர் புதோடா தயாரிக்கிறார். இந்நிறுவனம் இப்படத்தை தொடர்ந்து ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடிக்கும் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating