சங்கராபுரம் அருகே சொத்து பிரச்சினையில் மகனை கொன்ற தந்தை..!!
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கோடிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 70), விவசாயி. இவரது மகன் ராமு (50). தந்தையும், மகனும் தனித்தனியே வசித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடாஜலபதி தனது பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்தார். இதில் ராமுவுக்கு குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமு பல முறை எனக்கு சொத்து குறைவான அளவே கொடுத்துள்ளீர்கள் என்று வெங்கடாஜலபதியிடம் கேட்டார். அதற்கு வெங்கடாஜலபதி உனக்கு சரியான அளவில் தான் கொடுத்துள்ளேன் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை ராமு தனது தந்தை வீட்டுக்கு சென்றார். அங்கு தந்தை வெங்கடாஜலபதி மட்டும் தனியாக இருந்தார். அப்பேது ராமு சொத்துபிரச்சினை குறித்து மீண்டும் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடாஜலபதி விறகு வெட்ட வைத்திருந்த கோடாரியால் சரமாரியாக தனது மகன் ராமுவின் தலையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராமு சரிந்தார். அக்கம் பக்கத்தினர் ராமுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து வெங்கடாஜலபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தந்தையே மகனை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating