ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: மருத்துவக்கல்லூரி மாணவர் பலி…!!
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றுபவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மீனாள். இவர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக உள்ளார். இவர்களது மகன் தீபக் ராம் சர்மா (வயது20). இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் கண்ணன். இவரது மகன் முத்துச்செல்வம் (21). இவரும் மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார்.
டி.கல்லுப்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக முத்துச்செல்வம் நேற்று இரவு புறப்பட்டார். அவருடன் தீபக்ராம் சர்மா உள்பட 10 பேர் வந்துள்ளனர்.
மதுரையில் இருந்து பஸ்சில் வந்த இவர்கள், டி.கல்லுப்பட்டியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இறங்கினர். பஸ் சென்ற சில நிமிடங்களில் தனது பையை தீபக் ராம் சர்மா பஸ்சிலேயே தவற விட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரும், முத்துச்செல்வமும் மோட்டார் சைக்கிளில் பையை எடுக்க வேகமாக சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் அழகாபுரி பகுதியில் அவர்கள் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாணவர் தீபக் ராம் சர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துச்செல்வத்திற்கு கால் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து நத்தம் பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating