நடிகம் சங்க கட்டிடம் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..!!
சென்னை உயர்நீதிமன்றத்தில், தியாகராய நகர், வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் அவர்கள், “சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறி உள்ளனர். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கில் நடிகர் சங்கம் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அதேநேரத்தில் அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை தொடரலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating