நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை..!!
கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). போர்வெல்லில் பிட்டராக வேலை பார்த்தார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுபா (24). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். சுபா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை கணவர் செல்வராஜ் கண்டித்தார். இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
மனைவி மீது செல்வராஜ்க்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் ஈரோடு வீரப்பன்சத்திரத்துக்கு வந்து குடும்பம் நடத்தினர்.
அங்கும் அடிக்கடி சுபா போனில் யாரிடமோ பேசி வந்தார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி நடத்தையில் செல்வராஜ் சந்தேகப்பட்டார்.
இதையடுத்து தனது 2 மகன்களையும் செல்வராஜ் அழைத்து கொண்டு கோவைக்கு சென்று விட் டார். சுபா ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் பெற்றோர் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-8-2016 அன்று ஈரோடு வந்த செல்வராஜ் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு சுபா மறுத்தார்.
இதையொட்டி அவர்களிடையே கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் மனைவியை தாக்கினார். மேலும் கழுத்தை நெரித்தார்.
இதில் மயங்கி சரிந்த சுபாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (12.08.16) அங்கு சுபா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக செல்வராஜ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதியும், நாகரத்தினமும் (பொறுப்பு) வாதாடினார்கள்.
Average Rating