தணிக்கை குழுவில் சிக்கிய சூர்யா-ஜோதிகா படம்
சூர்யா-ஜோதிகா நடித்த `சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில், இருவரும் நெருக்கமாக நடித்த ஒரு காட்சிக்கு தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அந்த படத்துக்கு, `யு,’ `ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்பட உலகின் பரபரப்பான நட்சத்திர காதல் ஜோடி, சூர்யா-ஜோதிகா. இவர்கள் இருவருக்கும் வருகிற 11-ந் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களின் திருமண பரிசாக, இரண்டு பேரும் ஜோடியாக நடித்த `சில்லுன்னு ஒரு காதல்’ என்ற படம், நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.
இந்த படத்தில், சூர்யா-ஜோதிகா ஜோடியுடன் இன்னொரு கதாநாயகியாக பூமிகாவும் நடித்து இருக்கிறார்.
நெருக்கமான காட்சி
படத்தில், சூர்யாவும், ஜோதிகாவும் கணவன்-மனைவியாக நடித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இரவு நேரத்தில், குழந்தையை தூங்க வைத்துவிட்டு, இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சி இடம் பெறுகிறது.
படம் தணிக்கைக்காக, தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது சூர்யா-ஜோதிகா நெருக்கமாக நடித்து இருந்த அந்த பாடல் காட்சிக்கு, தணிக்கை குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாடல் காட்சியில் குறிப்பிட்ட ஒரு பகுதியை நீக்கும்படி கூறினார்கள்.
அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல், டைரக்டர் கிருஷ்ணா, நடிகர் சூர்யா ஆகிய மூவரும் சம்மதிக்கவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
`யு,’ `ஏ’ சர்டிபிகேட்
ஆட்சேபத்துக்குரிய அந்த காட்சியை நீக்கினால், `யு’ சர்டிபிகேட் (அனைத்து தரப்பினரும் பார்க்க தகுதியான படம் என்ற சான்றிதழ்) கொடுத்து விடுவதாக தணிக்கை குழுவினர் தெரிவித்தார்கள்.
அதற்கு சூர்யா தரப்பு சம்மதிக்காததால், `சில்லுன்னு ஒரு காதல்’ படத்துக்கு, `யு,’ `ஏ’ (13 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரியவர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்) என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.