இசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்..!!
ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.
‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.
இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளார்.
1992-ம் ஆண்டில் இவர் முதன்முதலாக இசையமைத்த ரோஜா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இசையுலகில் தனது வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில் இந்தியாவில் ’என்க்கோர்’ என்ற இசை சுற்றுப்பயணத்தின் மூலம் சில இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர். ரஹ்மான் நடத்துகிறார்.
அதில் முதல்கட்டமாக, வரும் 26-ம் தேதி ஐதராபாத் நகரிலும், டிசம்பர் 3-ம் தேதி அகமதாபாத் நகரிலும், டிசம்பர் 17-ம் தேதி மும்பையிலும், டிசம்பர் 23-ம் தேதி டெல்லியிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்களும் பாடகர் – பாடகியர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏ.ஆர். ரஹ்மான் இந்த இசைப் பயணத்தில் சென்னை நகரை ஏன் சேர்க்கவில்லை? என்பது தொடர்பான விரிவான தகவல் ஏதுமில்லை. எனினும், இரண்டாவது கட்டமாக வரும் ஜனவரி மாதவாக்கில் சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு அவர் திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
Average Rating