சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள்…
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று காலை 4 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியபடி தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர். ஒரு காரையும் வெடிகுண்டு சிதைத்தனர். துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைய முயன்ற அவர்களை சிரியா பாதுகாப்புப் படையினர் தடுத்து திருப்பிச் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
மேலும் தீவிரவாதிகள் வந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வேனையும் பாதுகாப்புப் படையினர் தடுத்து அங்கிருந்து வெளியேற்றி அதிலிருந்த குண்டுகளை அகற்றினர். சிரியா பாதுகாப்புப் படையினர் அதி வேகத்தில் செயல்பட்டதால் அமெரிக்க தூதரகம் தப்பியது.
ஒசாமாவை பிடிப்போம்: புஷ்
இதற்கிடையே ஒசாமா பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் என அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். செப்டம்பர் 11 தின தாக்குதலின் 5வது ஆண்டையொட்டி அவர் பேசுகையில்,
ஒசாமா தொடர்ந்து மறைந்து ஓடிக் கொண்டிருக்கிறான். எத்தனை காலம் ஆனாலும் அவனை பிடிப்போம். அவனை சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
இராக் விஷயத்தில் அமெரிக்கர்களின் முழு ஆதரவும் அரசுக்குத் தேவை. இப்போது உள்ள நிலையில் இராக்கிலிருந்து நமது படைகளை திரும்ப அழைக்க முடியாது. அது பின் லேடன் போன்ற தீவிரவாதிகளுக்கு வசதியாகப் போய்விடும். இராக் அவர்களது கையில் போய்விடும்.
அமெரிக்காவின் பாதுகாப்பு பாக்தாதில் நடந்து வரும் மோதல்களில் நாம் பெறும் வெற்றியில் தான் அடங்கியிருக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் இப்போது தான் தொடங்கியுள்ளது.
இப்போது நடப்பது நாகரீங்களுக்களுக்கான போர். இதில் நாம் வென்றாக வேண்டும். எதிர் வரும் காலத்தில் அமெரிக்காவுக்கு நிறைய சங்கடங்கள் வரும். இந்த வரலாற்று சோதனைகளை வெல்ல நாம் ஒன்று பட்டு போராட வேண்டியது அவசியம்.