இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம்
இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞரின் சடலத்திற்குப் பதிலாக வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கட்டுநாயக்க பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சன் சிறிபால திசாநாயக்க என்பவரின் சடலத்திற்குப் பதிலாக வேறொரு சடலம் அனுப்பி வைக்கப்பட்டமையையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு விமான நிறுவனமொன்றுக்குரிய விமானத்தில் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சடலமொன்று ரஞ்சன் சிறிபால திசாநாயக்கவின் உறவினர்களால் மருதங்கடவல பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கெக்கிராவை பகுதியில் மலர்ச்சாலையில் வைத்து பெட்டி திறக்கப்பட்டபோது அதில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலமே காணப்பட்டுள்ளது. இதனையடுத்து சடலம் மீண்டும் கொண்டு வரப்பட்டு கட்டுநாயக்க விமானநிலையத்தில் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலம் சுவிஸ்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating