இடதுசாரிகள் ஆதரவு வாபஸானது-நாளை ஜனாதிபதியிடம் கடிதம்
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியை அணுகுவது உறுதி என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை இன்று இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். நாளை இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் வழங்கவுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று டெல்லியில் நடைபெற்ற இடதுசாரிகளின் அவசர கூட்டத்திற்குப் பி்ன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார். முன்னதாக 10ம் தேதி தான் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக இடதுசாரிகள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விஷயத்தில் இறுதி முடிவெடுக்க இடதுசாரி தலைவர்களின் அவசர கூட்டம் டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம் நிலைமையின் தீவிரம் உணர்ந்து முன்கூட்டியே நடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவவிரத பிஸ்வாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
Average Rating