இலங்கை அகதிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள்: ஆட்சியர்
இலங்கை அகதிகளுக்கு எளிதில் தீப்பிடிக்க முடியாத வகையில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஆட்சியர் உ சகாயம் உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம், எம். மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 34 வீடுகள் எரிந்து நாசமானது. தகவலறிந்ததும் ஆட்சியர் உ. சகாயம் விசாரணை நடத்தினார். செவ்வாய்க்கிழமை மீண்டும் முகாமுக்கு வந்த ஆட்சியர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ரூ.2 ஆயிரம் உதவித் தொகை, சமையல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குடம், படுக்கை விரிப்புகள், ஆடைகள், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் உ சகாயம் கூறுகையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவருக்கும் மாற்று வீடுகள் கட்டித்தரப்படும். இந்த வீடுகளில் சிமெண்ட் அட்டை பொருத்தப்பட்டு எளிதில் தீ பிடிக்காத வகையில் அனைத்து வகையான பாதுகாப்புகளும் செய்துதரப்படும் என்றார். ஆட்சியருடன், மாவட்ட வருவாய் அலுவலர் கு. கோவிந்தராஜ், கோட்டாட்சியர் கற்பகம் உள்ளிட்டோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
Average Rating