தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம்..
5ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் தொழிற்சங்கங்கள் சில இன்று நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியுள்ளன. இதனால் அரசாங்க நிறுவனங்களின் கடமைகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவருகிறது. பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்றுகாலை வழமையான நிலையில் ஆரம்பமானபோதிலும், பகல் வேளையில் அவற்றில் சற்று மந்தநிலை தோன்றிய போதிலும் போக்குவரத்து பாரியளவில் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லையென்று கூறப்படுகின்றது. இதேவேளை சகல ரயில் சேவைகளும் நேர அட்டவணைப்படி இயங்குவதாக பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி டீ.வி குணபால தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் பஸ் வண்டிகளை முடியுமான வரையில் சேவையிலீடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக அன்றாட செயற்பாடுகளுக் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லையென்று மின்சக்தி அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே செனிவிரட்ண கூறியுள்ளார். போக்குவரத்து சபையின் சேவை வழமை போல் இடம்பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. தொடருந்து சேவைகளும் இன்று வழமை போல் இடம்பெற்றதாக தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள மருத்துவமனைகளின் சேவைகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாதிக்கப் படவில்லையென சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். பாடசாலை நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறுவதாக கல்வியமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இன்றையதினம் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இடம்பெறுமாயின் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த நேற்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
Average Rating