ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலிக்கு ‘டுவின்ஸ்’
ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட் கனவுக்கன்னியரில் ஒருவரான ஜூலி கர்ப்பமாக இருந்து வந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என முன்பே டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பிரசவத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் ஜூலி- பிராட் பிட் தம்பதியினர். இந்த நிலையில் தெற்கு பிரான்சில் உள்ள நைஸ் நகரில் உள்ள சீசைட் லென்வால் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு நேற்று அழகிய குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று ஆண், இன்னொன்று பெண். சிசேரியன் மூலம் பிரசவித்துள்ளார் ஜூலி. தாயும், சேய்களும் நல என மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது. ஜூலிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் மைக்கேல் சுஸ்மான் கூறுகையில், சனிக்கிழமை இரவு சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறந்தன. இரு குழந்தைகளும், ஜூலியும் நலமாக உள்ளனர். பிராட் பிட் கூடவே இருந்தார். ஆண் குழந்தைக்கு நாக்ஸ் லியோன் எனவும், பெண் குழந்தைக்கு விவியன் மார்செலின் எனவும் பிட் தம்பதி பெயரிட்டுள்ளனர். ஆண் குழந்தை 5.03 பவுன்டுகளும், பெண் குழந்தை 5 பவுன்டுகளும் எடை உள்ளன. ஜூலிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பது குறித்து பிராட் பிட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது சந்தோஷமான தினம் என்று அவர் கூறியுள்ளார். ஜூலி – பிட் தம்பதிக்கு ஏற்கனவே மட்டாக்ஸ், பாக்ஸ், ஜஹாரா, ஷிலோ என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஜூலி பிரசவத்திற்காக எங்கு அனுமதிக்கப்படுவார் என்று பத்திரிக்கையாளர்கள் கண் கொத்தி பாம்பாக கண்காணித்து வந்தனர். ஆனால் அனைவருக்கும் டேக்கா கொடுத்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் சீசைட் மருத்துவமனையின் மாடியில் உள்ள ஹெலிபேடில் இறங்கி அங்கு அட்மிட் ஆனார் ஜூலி. இதனால் பத்திரிக்கையாளர்களால் ஜூலியை படம் பிடிக்க முடியாமல் போய் விட்டது.
Average Rating