முதல்முறையாக இஸ்ரேல் ஒப்புதல் சிரியா அணு உலையை தகர்த்தது நாங்கள்தான்!!
கடந்த 2007ல் சிரியாவின் அணு உலை அழிக்கப்பட்டதற்கு தங்கள் நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 2007ல் சிரியாவின் டெய்ர் எஸ்ஸார் பகுதியில் கட்டி முடிக்கப்படும் நிலையில் இருந்த அணு உலையை தங்கள் நாட்டு ராணுவம்தான் வான்வழி தாக்குதல்மூலம் அழித்ததாக தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த 2007, செப்டம்பர் 5 முதல் 6 வரையில் இஸ்ரேல் போர் விமானங்கள், கட்டி முடிக்கப்படும் நிலையில் இருந்த சிரியாவின் அணு உலையை குண்டுவீச்சால் தகர்த்தன.
இதன் மூலம், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த நாடுகளுக்கு அச்சம் ஏற்படுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தாக்குதல் குறித்த முழு விவரங்களை வெளியிட முடியாது. இந்த தாக்குதல் மூலம் அப்பகுதியில் இருந்த பெருமளவிலான ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கிருந்து வெளியேறினர். மேலும், சிரிய அதிபர் பசார் அல் ஆசாத், தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு காரணம் இஸ்ேரல்தான் என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இஸ்ரேலே அதை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் இந்த ஒப்புதல், ஈரானுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாக குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
Average Rating