கொஞ்சம் சும்மாதான் இருங்களேன்…!!(மருத்துவம்)
நம்மைச்சுற்றியும் எப்போதும் பரபரப்பு, கூச்சல், குழப்பம், சண்டை சச்சரவுகள் என்றிருக்கும் இந்த நகரத்தில், ‘மொழி’ பிருத்விராஜ் போல ஒவ்வொருவரும் காதில் பேண்டேஜ் சுற்றிக்கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அமைதியான ஓர் இடத்தில், மௌனமாக சில மணித்துளிகளாவது உட்கார மாட்டோமா என்பதுதான் நம் அனைவருடைய ஆசை. அமைதியான சூழலில் இருப்பதால் மனித மூளையில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்பட்டு, அதிக ஆற்றலுடன் செயலாற்றுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
விதவிதமான ஒலிகளை எழுப்பியும், அதேவேளையில் அமைதியான சூழலிலும் எலிகளிடத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் Brain Structure and Function என்னும் அமெரிக்க இதழ் ஒன்றில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2 மணிநேரம் எலிகளை அமைதியான இடத்தில் வைத்துப் பார்த்ததில் அவற்றினுடைய மூளையில் கற்றல், நினைவாற்றல் மற்றும் உணர்வுகளோடு தொடர்புடைய Hippocampus என்னும் செல்கள் புதிதாக உற்பத்தியானதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
‘புதிதாக உருவாக்கப்படும் செல்கள், நியூரான்களிலிருந்து வேறுபடுத்தி மூளைக்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதற்கு அமைதி தேவைப்படுவதை நாங்கள் நேரடியாகப் பார்த்தோம்’ என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான இம்கேகிர்ஸ்ட். மௌனமாக இருக்கும்போது, மூளையானது உள் மற்றும் வெளி உலகத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமான நிலையில் ஓய்வெடுத்துக் கொள்கிறது. அப்போது உள்வாங்கிய தகவல்களை மதிப்பீடு செய்ய முற்படுகிறது. இதனால் விஷயங்களை இன்னும் தெளிவாக சிந்தித்துப் பார்க்க முடியும்.
நாம் தூங்கும்போதுகூட நம் உடலானது ஒலி அலைகளுக்கு வினைபுரிவதால் சத்தம், உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகமாகச் சுரக்கச் செய்யும் வலிமை கொண்டவை. அதிக சத்தமுள்ள சூழலில், மூளையில் உள்ள Amygdala என்னும் பகுதி மன அழுத்த ஹார்மோன்களை அதிகமாக சுரக்கிறது.
இதனால் அத்தகைய சூழலில் பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் உணர்வோம். அப்போது நம் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். ஆனால், அமைதி அந்த எதிர்மறை வினைகளையும் போக்கக்கூடியது.அதிக ஒலி, நினைவாற்றல், கவனம் மற்றும் பிரச்னைகளைக் கையாளும் திறன்களை குறையச் செய்துவிடும். போக்குவரத்து நிறைந்த சாலைகளுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் சிதறி, மதிப்பெண்கள் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேர ‘மௌனம்’ அந்த எதிர்மறை ஆற்றல்களைப் போக்கி, நாம் இழந்த திறமைகள் அனைத்தையும் மீட்டுத்தரும் வல்லமை படைத்தது என்கிறார்கள். இன்று அறிவியல் வலியுறுத்தும் ‘மௌன விரதம்’ அன்று ஆன்றோர் அறிவுறுத்தியது.
Average Rating