வாக்குப்பதிவு விறுவிறுப்பு – ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? (உலக செய்தி)
சுவீடன் நாட்டில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, கிரீன் கட்சி கூட்டணியின் சிறுபான்மை ஆட்சி நடக்கிறது.
அங்கு செப்டம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி, சுவீடன் ஜனநாயக கட்சி, மிதவாத கட்சி இடையே முக்கிய போட்டி உள்ளது. அகதிகள் குடியேற்றப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக பிரசாரத்தில் இடம் பிடித்தது.
சுவீடன் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் ஆபத்தானது என பிரதமர் ஸ்டீபன் லோப்வென் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மறுத்து சுவீடன் ஜனநாயக கட்சி தலைவர் ஜிம்மி ஆகெஸ்ஸான் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு பின்னர் விறுவிறுப்பு அடைந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து வாக்குப்பதிவு செய்தனர்.
பிரதமர் ஸ்டீபன் லோப்வென் மனைவி உல்லாவுடன் வந்து ஸ்டாக்ஹோமில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆளும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி, பிற கட்சிகளை விட கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்க வைக்கிற வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.
Average Rating