சமாதான பேச்சுவார்த்தை குறித்த அறிக்கைக்கு விடுதலைப் புலிகள் சாதகமான பதில்
நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ் பெரஸ்கர் அவர்களுடன் கிளிநொச்சியில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், அண்மையில் புருசல்ஸ் நகரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் இணை தலைமை நாடுகளின் அறிக்கைக்கு விடுதலைப் புலிகள் சாதகமாக பதிலளித்து இருப்பதாக விடுதலைப் புலிகளி் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளும், அரசாங்கத்தினரும் அடுத்த மாதத்தின் முற்பகுதியில் ஒஸ்லோ நகரத்தில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டிருந்ததாக இணை தலைமை நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவதினை இலங்கை அரசு மறுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் வன்முறையினை விடுத்து, சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு இரு தரப்பினருக்கும் இணை தலைமை நாடுகள் விடுத்த அழைப்பிற்கு, விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டினை, இன்றைய சந்திப்பின் போது நோர்வேயின் இலங்கைக்கான தூதுவரும், இணை தலைமை நாடுகளின் பிரநிதியுமான ஹன்ஸ் பெரஸ்கர் அவர்களிடம் விளக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, விடுதலைப் புலிகளின் தரப்பில், அரசியற்த்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன், காவல்துறை பொறுப்பாளர் நடேசன் ஆகியோர் முக்கியமாக கலந்து கொண்டனர்.
இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை, வடக்குகிழக்குப் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்குடா நாட்டில் நடைபெற்று வரும் படுகொலைகள், ஆட்கடத்தல் போன்ற விடயங்களும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் முழு அளவிலான கண்காணிப்பு நடவடிக்கை பற்றியும், இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.